26 September 2013

பழம்பெரும் பரதவர்

"திரை கடலோடியும் திரவியம் தேடு"  என்பது ஆன்றோர் வழக்கு.  (நரகத்தில் போயாவது நாலு காசு தேடு." என்று என் அம்மா கூறுவதுண்டு.)  ஆனால் நம் மக்கள், திரைகடலுக்குள் அல்லவா திரவியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  "எங்கள் கால்கள் இன்று இன்று சேற்றிலே பட்டால் தான், நாளை உங்கள் வயிற்றுக்குச் சோறு." என்று கூறும் உழவனுக்கு, விதைக்கும்போதும், அறுக்கும்போதும் தான் வேலை. ஆனால் நம்மவர்க்கோ, வாழ்நாள் முழுவதும் வேலை.
 கொந்தளிக்கும் கடல், வெந்தணலாய்ச் சுடும் சூரியன் சூறாவளிக்காற்று, ஆளையே விழுங்கும் கொடிய கடல் விலங்குகள்--இத்தகைய இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அஞ்சாது, நம் மக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நம்மவர்க்கு இயற்கையிலேயே மன உரத்தோடு கூடிய முரட்டு சுபாவம் அமைந்து விடுகிறது.  கடலின் இரைச்சலோடு போட்டி போடுவதால்,உரத்த குரலில் பேசும் வழக்கம், பிறவியிலேயே அமைந்து விடுகிறது.  நம் முத்துக்குளித்துறை முற்காலத்தில் எவ்வாறு இருந்தது? இதன் பழம்பெருமை என்ன?  அதன் தொன்மைதான் என்ன?
வாஸ்கோடகாமா 1498--ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்த பின்னர்தான், போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள்.  பாப்பானவர் ஐந்தாம் நிக்கோலஸ், போர்த்துக்கீசிய மன்னர்களுக்கு அளித்த அங்கீகாரத்தின்படி, கிறிஸ்தவ மத போதகர்கள்-- பிரான்சிஸ்கன், டொமினிகன், சேசுசபை, அகுஸ்தினார், துறவிகள்--இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப்
பகுதிகளில் உள்ள மக்களுக்கு (1500 ஆம் ஆண்டு மட்டில்) வேதத்தைப் போதித்துக் கோவில்களும் கட்ட ஆரம்பித்தனர்.  16--ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் முத்துக்குளித்துறை (தற்போதுள்ள தூத்துக்குடி) கன்னியாகுமரியிலிருந்து இராமேஸ்வரம் வரை பரந்து விரிந்திருந்தது.  இதன் தெற்குப் பகுதியின் பாதியளவு திருவாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்கும், வடக்குப் பகுதியின் பாதியளவு மதுரை நாயக்கர் மன்னர்களின் ஆளுகைக்கும்
உட்பட்டிருந்தன.  இருப்பினும் 1516--ஆம் ஆண்டு மட்டில், இந்தப் பகுதி முழுவதையும் இஸ்லாமியர் ஆக்கிரமித்து விட்டனர்.  இந்த இஸ்லாமியர் இந்தக் கடற்கரையோர மக்களை மிகவும் கேவலப்படுத்தத் தொடங்கினர்.  ஒரு சமயம் ஒரு இஸ்லாமியர் ஒரு பரதவரின் காதை அறுத்து அவள் அணிந்திருந்த வளையத்தைக் கவர்ந்து சென்று விட்டான்.(the war of the ear)  மேலும் பல கிராமங்களைத் தீக்கிரையாக்கினான்.  அங்குள்ள மக்கள் போர்த்துக்கீசியர்களின் உதவியை நாட, போர்த்துக்கீசியர்களின் படை இவர்களைக் காப்பாற்றியது.  படையுடன்
வந்த கிறிஸ்தவப் போதகர்கள் சுமார் 20,000 பேர்களுக்கு  ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வைத்துச் சென்றுவிட்டனர்.  ஆனால் மக்களுக்கு ஞான காரியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  1542--ஆம் ஆண்டு மே மாதம் புனித சவேரியார் இங்கு வந்தடைந்தார்.  இவர் இரண்டு தமிழ்க் கிறிஸ்தவ வேதியர்களுடன் முத்துக்குளித்துறைப் பகுதிக்கு வந்து, மக்களுக்குக் கிறிஸ்தவ மத
ஞானத்தைப் போதிக்கத் தொடங்கினார்.  பின்னர் அவர்கள் ஆண்டு இறுதியில், கோவாவிலிருந்து உதவியாளர்களைப் பெற்றுக் கொண்டு திருச்சபை குரு மடத்தை நிறுவி, அதை சேசு சபைக்கு மேற்பார்வையில் விட்டார்.
இதன் பின்னர் 1544--ஆம் ஆண்டு கொம்புத்துறையில் புனித முடியப்பர் ஆலயம்
அமைக்கப் பட்டது.  அதே ஆண்டு இரண்டு மாணவர்கள் கோவா ஆயரால் குருப்பட்டம்
பெற்றதாய்ச் செய்தி கூறுகிறது.  பின்னர் புனித சவேரியார் குடியிருப்பு (மணல் மாதா கோயில்), அதன் பக்கத்திலுள்ள சங்கரன் குளம், ராமநாதபுரம், காயல் ஆகிய இடங்களுக்குச் சென்று ஞானத்தைப் போதித்து, அங்குள்ள மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு 1545--ஆம் ஆண்டு மலாக்கா சென்றுவிட்டார்.  1546--ஆம் ஆண்டு மார்ச் மாதம் Antony Crinimali --ஐ
மீனவப் பகுதிக்கு வேதம் போதிக்கக் கட்டளையிட்டார்.  அந்தக் கிரிமினாலிதான், முதன்முதல் தமிழ் எழுத்துத் தெரிந்த அயல் நாட்டுப் போதகர் ஆவார்.  ஓராண்டு கழித்து இவருடன் Fr. Anrique பாதிரியார் வந்து சேர்ந்தார்.
பின் 1548--ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் வந்த புனித சவேரியார் Fr.கினிமினாலியை இவர்களுக்கெல்லாம் தலைவராக்கினார்.  (Superior).  ஆனால், 1549--இல் வடுகர்களுக்கும், போர்த்துக்கீசியர்களுக்கும் வேதாளை என்ற இடத்தில் நடந்த சண்டையில் Fr. கிரிமினாலி கொல்லப் பட்டார்.  எனவே Fr. என்றி என்றிக்கஸ், இவர்க்குப் பின் தலைவரானார்.
புன்னைக்காயல்:
சேசு சபை புன்னைக்காயலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பொழுது, என்றிக்கஸ் "ARTE"  என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றி, முக்கியமான சில மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார்.  1550--ஆம் ஆண்டு புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையும், வேதியர்களுக்கான பயிற்சி முகாமும் ஏற்படுத்தப்பட்டது.  அவ்வமயம் பீற்றர் லூயிஸ் (கேரள நம்பூதிரி) என்பவரை கிறிஸ்தவ வேதத்திற்குக் கொண்டு வந்து 1557--ஆம் ஆண்டு புன்னைக்காயலில் இருந்த தமிழ்க் கல்லூரிக்குப் பேராசிரியராக நியமித்தார்.  1551--ஆம்
ஆண்டு மட்டில் 30 கோவில்கள் (மரம், களிமண், பனை ஓலையால் வேயப்பட்டது)
கடற்கரை ஓரங்களிலிருந்த ஊர்களில் இருந்தன.  இவைகளெல்லாம்  1553--ஆம்
ஆண்டு திருவாங்கூர் மன்னரால் சேதமாக்கப் பட்டாலும், இவைகள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டன.
1557--ஆம் ஆண்டு கொச்சி மேற்றிராசனமாக மாறியது.  முத்துக்குளித்துறை
ஊர்கள் இதில் அடங்கியிருந்தன.  பின்னர் கொச்சிக்கு சேசு சபை அல்லாத
வேறொருவர் மேற்றிராணியராக வந்த பொழுது சேசு சபைக்கும் அவர்களுக்குமிடையே
சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டது.  1579--ஆம் ஆண்டு, முதல் தமிழ்
அச்சுக்கூடம் புன்னைக்காயலில் நிறுவப் பட்டது.  Fr.என்றிக்கஸ், தமிழில்
தம்பிரான் வணக்கம்,  கிரிசித்தியானி வாழ்வாக்கம், Flos Sanctorum(அடியார்
வரலாறு)  முதலிய நூல்களை இயற்றினார்.  Fr. என்றிக்கஸ்தான் முதன்முதலில்
தமிழ் அகராதியை எழுதினார்.
He was the first lexicographer and also the Father of the Tamil of the Tamil Press.
1644--ஆம் ஆண்டு பெருமணல், பெரியதாழை, மணப்பாடு ஆலந்தலை, வீரபாண்டியன்
பட்டினம், புன்னைக்காயல், பழைய காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார், பெரிய பட்டணம் ஆகிய ஊர்கள் பங்குத்தளங்களாக மாறின.  அந்தக் கடற்கரையோர மக்கள், ஆணையிட வேண்டுமானால், "Fr. என்றிக்கஸ் மேல் ஆணையாக" என்பார்களாம்.  Fr. என்றிக்கஸ் புன்னைக்காயலில் இறந்து (பெப். 6, 1600) தூத்துக்குடியில் பனிமய மாதா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார். சண்டைகளின் காரணமாகப் பல கோயில்கள் சேதமடைந்ததால், அவருடைய கல்லறையைத் தற்சமயம் காண முடியவில்லை.  ஆனால் அவருடைய தலை ஓடும் விலா எலும்புகளும் பாதுகாக்கப்பட்டுப் புனித சவேரியார் சிற்றாலயத்தில் (பனிமய அன்னைப்
பேராலய வளாகத்தில் இருக்கும்) இன்னும் இருப்பதைக் காணலாம்.  அவருடைய
அடக்கத்திற்கு ஏழு தோணிகள் நிறைய மக்கள் வந்திருந்தார்களாம். காயல்பட்டினத்தில் இருந்த இஸ்லாமியர்கள் இவர் இறந்த அன்று விரதம் இருந்தார்களாம்.  இந்துக்கள் இரண்டு நாட்கள் விரதம் இருந்து தங்கள் கடைகளைத் திறக்காமல் துக்கம் அனுஷ்டித்தனராம்.
C.C. Don Michael Joan D'Cruz Baratha Varma Pandian 1553--1562 A.D.
இந்த அரசன் ஏழு கடலுக்கும் அரசனாக இருந்திருக்கிறான்.  இவனுடைய ஆட்சியில் மக்கள், போர்த்துக்கீசியரின் ஆதரவில், சண்டை சச்சரவின்றி சந்தோஷமாக இருந்தார்கள்.  இவனுடைய காலத்தில் தான் புனித சவேரியார், பிலிப்பைன் நாட்டிலுள்ள மணிலா மடத்திலிருந்து பனிமய மாதா சுரூபத்தை இங்கு அனுப்பியிருக்கிறார்.  அந்தச் சுருபம் புனித சின்னப்பர் (St. Paul's Church) ஆலயத்தில், பட்டங்க்கட்டியார்கள், அடப்பனார்கள் ஆகியோர்
முன்னிலையில் அபிஷேஹம் பண்ணப்பட்டது.

பரவ மக்களின் கொடியில் 21 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.  
இதை விளக்கும் விதமாக விருத்தமொன்றும் பாடப்பட்டது.
விருத்தம்
"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யாவும்
திகழ் கனக மகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"
திருமணத்தின்போது பாடும் பாடல்:
திருஞான ஜோதி வரமான இஸ்பிரீத்துசாந்து
நலம்பெறுதல் அரிதான நங்கை வளர்மதி (பெயர்)
உச்சுவச்சு அம்மா
தனையே பதிவான  ரெட்ன கொழு ஏற்றினாளே
நாத்தமார் பட்சமும் சரமாலை சூடியே
கொஞ்சி விளையாடும் சடங்கும் இதுவே.
சித்திரத்தை ஒத்த மடமாது மணி
ரெட்னமெனக் கொலூ ஏறினாள்-- இப்போது
பந்து குழல் கந்தமர் சூடிய--அவள்
சிந்து மத்த கூந்தலிலே ஆட
பால் வளம் பகிர்ந்து ஒரு பால் அளிக்க
மின்னல் வேல் விழியால் பன்னீரால் தெளிக்க
இங்கிதம் கலந்த ஏலம் கிராம்பு--இவள்
நங்கையெனக் களிப்பால் தாம்பூலம்
பொற்சரிகை குரிசில்லாள்--சேலை
ஒயிலை மெச்சிடவே வேண்டுமே இவ்வேலை
தென்றல் திருமங்கைதனில் துலங்கக் கொண்டு
இஸ்பிரீத்து சாந்து வரம் இணங்க
சுந்தரக் கணவனும் கிறங்க-- பின்னால்
சந்தானம் பெறுக வழி நடந்து
ஆல் இலை நிகரற்ற பயன்போல்
கொடி அணிந்த மணக்கோலப் பெண்ணே
சொல்வேன் சொல்வேன் கொடியை--இவள்
இத்தகையால் விளங்கும் பெண்ணரசி
இவள் மெச்சிடவே வேண்டும் இக்கொடியே.
-அன்டொனிட்டோ,முதுநிலைப் பொறியாளர் D.C.W. (ஓய்வு)

No comments:

Post a Comment