27 August 2006

அமரர் செவாலியர் J.L.P. ரோச் விக்டோரியா


இன்றைய இளைய தலைமுறை நமது முன்னோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இது உதவும்.
செவாலியர் ஜான் லடிஸ்லாஸ் பிச்சையா ரோச் விக்டோரியா
(Chevalier J.L.P. Roche Victoria)

தூத்துக்குடி நகரசபையின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் (1885 முதல் 1901 வரை) பெருந்தகை J.M.B. Roche Victoria அவர்களின் குமாரர் ஜான் லடிஸ்லாஸ் பிச்சையா ரோச் விக்டோரியா (J.L.P. Roche Victoria) அவர்கள் 1894 செப்டம்பர் 26ல் பிறந்தார்.

  • தூத்துக்குடி நகரசபை தலைவராக 1926 முதல் 1946 வரை, ஐந்து முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சென்னை சட்டசபையில் M.L.C. (1924)
  • தூத்துக்குடி துறைமுகக் கழகம் துவங்கியது முதல் நெடுங்காலமாக அதன் உறுப்பினர், இரு முறை துணைத் தலைவர்,
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (1937),
  • நியமன உறுப்பினர் (1944-45),
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சபை உறுப்பினர் (1948),
  • குமாரசாமிராஜா அமைச்சரவையில் உணவு மற்றும் மீன்துறை அமைச்சர் (1949-52),
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (1953-57),
  • ரோட்டரி கவர்னர் (South India & Sri Lanka) 1948-49,
  • இவை மட்டுமின்றி சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராகவும்,
அனைத்துலக ரோட்டரி கிளப் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
  • தூத்துக்குடி ஜிம்கானா கிளப் ஸ்தாபகர்
  • இந்திய கிராம முன்னேற்றத்திற்காக மாதிரி கிராமமான ‘மங்களகிரி’யை தூத்துக்குடி அருகே நிறுவியவர்
  • அனைத்து இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் (டில்லி) உறுப்பினர்.
  • அனைத்து இந்திய வயது வந்தோர் கல்விக் கழக துணைத்தலைவர் (டில்லி),
  • இந்திய குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக 1959ல் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற (R.I.325 மாவட்ட) மாமன்றத்தில் கலந்து கொண்டவர்,
இவைமட்டுமின்றி ஏழை எளியவர்க்கு உதவும் நன்மனம் கொண்ட கொடையாளி, சிறந்த தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர்.
நல்ல கத்தோலிக்க, எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தவர். பழகுவதற்கு இனிமையானவர். இதுபோன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.

1952ல் திருத்தந்தை12ம் பத்திநாதரால், ‘செவாலியர்’ (Order of knight of St. Gregory) பட்டம், திருச்சபைக்கும், நாட்டிற்கும் அவராற்றிய தொண்டுகளுக்காக வழங்கப்பட்டது. இவரின் பணிகளும், வகித்த பொருப்புகளும் எண்ணற்றவை.

இவர் தனக்குச் சொந்தமான இடங்களை தூத்துக்குடி பழைய கோர்ட் (தற்போதைய P.W.D. Office), நகர சந்தை (Market), 12வாசல் மையவாடி (நகராட்சி மையவாடி), மருத்துவமனை, தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் (அமரர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நினைவு கட்டிடம்), இரயில்வே நிலையம் ஆகியனவற்றிக்குத் தந்தது மட்டுமன்றி அதனைக் கட்டியும் கொடுத்தார்.

இவர் தனது 68வது வயதில் 1962 அக்டோபர் 15ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் திரு உருவச்சிலை அவரின் நினைவாக உள்ள தூத்துக்குடி ரோச் பூங்காவில், தூத்துக்குடி பரத மகாஜன சங்கம், J.L.P. Roche Victoria நினைவுக்குழு மற்றும் திருமந்திர நகர் பொதுமக்களால் 02.05.1965 அன்று மேதகு Thomas Fernando D.D. DCL, Bishop of Tuticorin அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

J.L.P. Roche Victoria அவர்களின் நூற்றாண்டு விழாவினை தூத்துக்குடியில் 1995ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தூத்துக்குடி பரவர் நலச் சங்கம் நடத்தியது.

14 August 2006

நக்கீரர் பரதர் (Nakkeerar / Nakeerar / Nakeeran) -


சங்கச் சான்றோருள் கபில பரணரோடு ஒருங்கு வைத்து எண்ணப் பெறுபவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர். இவர் முத்தமிழ்த் துறையும் முறைபோகிய மூதறிஞர்; ‘யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்; மறைமொழிவல்ல நிறைமொழி மாந்தர்; நட்புக்கு இலக்கியம்; நன்றியின் நிலைக்களம்; கருதியது கரவாதுரைக்கும் கருத்துரிமைக்குக் குரல் கொடுத்த முதல் எழுத்தாளர்; இலக்கியத்திற்கு புது நெறி புகுத்திய முதல் இறைஞானி; அகப்பாட்டோ என ஐயுறும் அளவுக்கு - ஏன் - அகப்பாட்டே என அறிஞர் துணியும் அளவுக்கு – அகச்சுவை பொதுளப் புறப்பாட்டியற்றிய புலமையர்; அகத்துறைப் பாடல்களிற் கூட வரலாற்றுச் செய்திகளை மடுத்துவைத்த வரலாற்றாளர். அத்தகைய வல்லாளர் நம் பரதகுலத்தவர் என்பது நமக்குப் பெருமையன்றோ!

அவர் பரதகுலத்தவர் என்பதற்கான சான்றுகள்:

சண்பக மாறன் என்னும் வங்கிய சூடாமணிப் பாண்டியன் அவையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுளின் பொருளமைதி குறித்துச் சங்கப் புலவராக வந்த சிவபெருமானுக்கும், நக்கீரர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்தது. அவ் வாதம் பொருள் பற்றிய நிலையிலிருந்து விலகி, குலம் பற்றிய வாதமாக ஜாதி பற்றிய வாதமாக அமைந்தது. அப்போது சிவபெருமான் கூறியதாக வரும் வெண்பா:

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கப் படவிரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீர்கீர் என்அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன்

என்பது. இதற்கு எதிராக நக்கீரர்:

சங்கறுப்ப தென்குலமே தம்பிராற் கேதுகுலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமே - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில் லை

எனக் கூறினார் என்பர்.

இதில் ‘சங்கறுப்பது என்குலம்’ என்பதிலிருந்து நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்பது நிரூபணமாகிறது.

இது மட்டுமன்றி
நக்கீரனின் இயற்பெயர் கீரன். பாலப்பன் என்பது இவரது பிள்ளைப்பெயர்.
‘ஓர் பரவன் இல்லில் புத்தியுள சேயானான் பாலப்பன்
என நாமம் புனையப் பெற்றான்’

என்பதாலும் நக்கீரரை பரதவர் என்றும், தமிழகத்தில் சங்கு அறுக்கும் தொழில் என்பது பரதவர்களின் குலத்தொழில் என்பதாலும் நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்று முருகதாச சுவாமிகள் கூறுகின்றார்.