25 September 2010

சுகஸ்தான் வாசி...


தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா

சுகஸ்தான் வாசி...


தொழில் துறையில் வடக்கும் தெற்கும் -

ரோச்விக்டோரியாவும் T.V.S.-ம்

தம்பி!

அமைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு - விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிடமெல்லாம்!!

தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் - என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?'' என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்!

இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப் பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை.

வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின் போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி கிடைக்கவேண்டும், நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது.

தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள்.

சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன் - குளோரைட் - இலிமினைட் - போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன.

தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டு மானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும்.

இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள் ஒப்புகின்றனர்.

சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடு களிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக் காட்டிற்று.

நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும் வரவேற்றனர்.

குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கி - ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை.

இதற்கு கனரகத் தொழிற்சாலை ரசாயனப் பொருள் உற்பத்திக் கம்பெனி; அமைக்கப்பட்டது. மூலதனம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டில், இந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் துவக்கவிழா விமரிசையாக நடந்தேறியது.

துவக்க விழா நடத்தினவர் மைசூர் மகாராஜா!!

தம்பி! இப்போது அந்தத் தொழிற்சாலை இயங்கவில்லை!!

அது குறித்தே இந்தத் துயரகீதம் வெளிவந்திருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் முதல் திரட்டி, நடத்தத் திட்டமிட்டு மும்முரமாக ஆரம்ப வேலைகளை நடத்தி வெற்றி பெற்று, 17 இலட்ச ரூபாய் வரையிலே பங்குத் தொகை திரட்டிவிட்டனர். சென்னை சர்க்காரும், 10 இலட்ச ரூபாய் அளவுக்கு இந்தத் தொழிற்சாலையில் பங்கு எடுத்துக்கொள்வதாக வாக்களித்தது. இங்ஙனம் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று, பிரமுகர்களின் ஆசியைப்பெற்று, துவக்க விழாவிலே மைசூர் மகாராஜாவின் வாழ்த்துகளைப் பெற்றுத் துவக்கப்பட்ட தொழிற்சாலை, இன்று மூடுவிழாவுக்கு முகூர்த்தம் பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது! ஏன் என்று நிதி அமைச்சரைக் கேள் தம்பி, ஏனா? உங்களால் முடியவில்லை! உங்கள் தெற்குக்கு அவ்வளவுதான் யோக்யதை!'' என்று கொதித்துக் கூறுவார் ஆனால் அவருக்கும், உண்மை விளங்கினால், கோபமல்ல, கண்ணீர் வரும்.

தொழிற்சாலை அமைப்புக்காக நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது; பாதைகள், பாதை ஓரத்தில் மரம் செடி கொடிகள், காரியாலயக் கட்டிடங்கள், அவைகளைச் சுற்றி கிராதிகள், காம்பவுண்டுகள், வேலிகள், தோட்டங்கள், யாவும் கட்டப்பட்டன.

சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானத் தொழில் நிபுணர்களின் கூட்டுறவு கேட்டுப் பெறப்பட்டது.

கிரெப் கம்பெனியார், இதற்கான இயந்திரம் தரவும், தொழிற்சாலையில் பணியாற்றவும் இசைந்ததுடன், தங்கள் பங்குத் தொகையாக 6 இலட்ச ரூபாய் அளிக்கவும் ஒப்புதல் அளித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன!

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இயந்திரக் கருவிகள் வருவதற்கான ஏற்பாடு முடிந்துவிட்டது.

கிராம்ப்டன் கம்பெனியார் மின்சார சம்சார சம்பந்தமான இயந்திரங்களை அனுப்பிவைத்துவிட்டனர்.

தொழிற்சாலை அமையும் இடத்தருகே வசதிக்காக இரயில்வே இலாகாவினர் விடுதி அமைத்தளித்துவிட்டனர்.

குடிதண்ணீர் வசதிக்காகப் பெரிய கிணறுகள் தோண்டப் பட்டாகிவிட்டன.

தொழிலாளருக்கான விடுதிகள் கட்டுவதற்கான திட்டம் தயாராகி வேலை துவங்கிவிட்டது.

தொழிற்சாலையின் தேவைக்காகவென்றே, பாளையங் கோட்டையிலிருந்து தூத்துக்குடி வரையில் புதிய பாதை அமைக்க ஏற்பாடாகி வேலை நடந்தேறி வருகிறது.

தம்பி! இந்த ஒவ்வொரு வேலை துவக்கப்பட்டு நடந்தேறியபோதும் தொழிற்சாலை நடத்தவேண்டுமென்று திட்டமிட்டவர்களின் மனதிலேயும், தொடர்புகொண்டவர் களின் மனதிலேயும், எத்தனை ஆசை ஊறியிருக்கும்:

வேலையற்ற மக்களில் எத்தனை ஆயிரம் பேர், இந்தப் புதிய தொழிற்சாலை எழுவது கேட்டும் கண்டும், இனித் தங்கள் கஷ்டம் தீரும் என்று கருதியிருப்பர்.

ஆனால், தம்பி! 1953 இல் மைசூர் மகாராஜாவால் துவக்கப் பட்ட இந்தத் தொழிற்சாலை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? 1956 செப்டம்பர் திங்களில், துயரகீதம் பாடுகிறார்கள்!

துரோகம்! வஞ்சகம்! நம்பவைத்துக் கழுத்தறுப்பது! நம்பினோரை நட்டாற்றில் தள்ளுவது! தூங்கும்போது கல்லைத் தூக்கித் தலையில் போடுவது! - என்று பலப்பல கூறப்படுகிறதே, இந்தத் தொழிற்சாலை சம்பந்தமாக நடை பெற்றுள்ள சம்பவம், இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதாக இருக்கிறது.

கனரகத் தொழிலுக்குத் தேவையான ரசாயனப் பொருள் களைத் தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மூலதனத்துடன் நடத்துவது என்று திட்டமிட்டுத் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக ஒரு முறையும் வகுத்தனர்.

முதல் தவணை - அல்லது முதல் கட்டம் ஒன்று; இந்த முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து டன் சோடா உப்பு தயாராகும் அளவு வேலை நடத்துவது என்றும், ஐந்தாண்டுகள் இம்முறையில் வேலை செய்தான பிறகு, தினசரி பத்து டன் சோடா உப்பு தயாராகத்தக்க விதத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதென்றும், முறை வகுத்துள்ளனர்.

தென்னாட்டிலே தொழில் வளம் ஏற்படவில்லை என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்! வேண்டுமென்றே தென்னாடு புறக்கணிக்கப்படவில்லை; ஓரவஞ்சனை நடைபெற வில்லை என்று சமாதானம் கூறுகின்றனர். தென்னாட்டிலே தொழில் நடத்த, பணம் படைத்தோரும், பணத்தைத் திரட்டக்கூடியவர்களும் முன் வரவேண்டும் என்று யோசனை கூறினர்; டாட்டா, பிர்லா என்றுகூறி வயிற்றெரிச்சல்பட்டு என்ன பிரயோஜனம், உங்களுடைய அழகப்பாக்களை அழைத்துத் தொழில் நடத்தச் சொல்லுங்களேன் என்று கேலி பேசினர். அவ்விதம் புதிய தொழில்கள் துவக்கப்பட்டால் துரைத்தனம் வரவேற்கும், ஆதரவு அளிக்கும் என்று வாக்களித்தனர். இதனைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக் காட்டியும் வருகின்றனர்.

இப்போது, நடைபெற்று வரும் வேடிக்கையைக் கேள், தம்பி! கேள்!

இவ்வளவு வேலைகள் நடந்தான பிறகு - அதற்காகப் பல இலட்சம் செலவான பிறகு - மைசூர் மகாராஜாவின் திருக்கரத்தால் அஸ்திவாரம் அமைத்து, புதிய தொழிற்சாலைக்கான துவக்க ஏற்பாடுகள் பல செய்து முடித்து, நிபுணர்களை நியமித்து, வேலையைத் துவக்கியான பிறகு, இந்திய சர்க்கார் இந்தத் தொழிற்சாலை, தகுந்தபடி நடத்தப்படுமா என்பதிலே எமக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, என்று ஒரு கரடி'யை அவிழ்த்துவிட்டிருக்கிறது.

நாளொன்றுக்கு 5 டன் சோடா உப்பு தயாராகும் என்கிறீர்களே - இதுதான் உமது உற்பத்தியின் அளவு என்றால், கட்டிவராதே, தொழிலில் இலாபம் வராதே, வீண் கஷ்ட நஷ்டமல்லவா ஏற்படும் - இந்த நிலையில். புதிய தொழிற் சாலையை ஏன் கட்டிக் கொண்டு மாரடிக்கிறீர்கள் - விட்டுத் தொலையுங்கள் என்று இந்திய சர்க்கார், தமது மேலான, ஆலோசனையைக் கூறுகிறது.

எப்படி இந்தத் தொழிற்சாலையைச் சரியான முறையில் நடத்தமுடியும் - செலவுக்கும், போடும் முதலுக்கும், எடுத்துக் கொள்ளும் கஷ்டத்துக்கும் ஏற்ற பலன் கிடைக்காதே, இதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள் என்று இந்திய சர்க்கார், கேள்வி கேட்கிறது.

தம்பி! எல்லா விவரமும் ஆதாரமும் தேடித்தந்து, புள்ளி விவரக்கணக்குக் காட்டி, திட்டத்தை விளக்கி, திட்டத்துக்கு நிபுணர்கள் ஒப்பம் அளித்ததையும் எடுத்துக் காட்டித்தான், 1953 இல், இந்திய சர்க்காரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது - இந்தப் புதிய தொழிற்சாலை துவக்க.

இப்போது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, துவக்கவிழா நடத்தி, ஊன்றிய விதை செடியான பிறகு, கில்லி எடுத்து வேர் ஆழச்சென்றிருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போல, இந்தத் தொழிற்சாலை நடத்துவது இலாபகரமானதாக இருக்குமா என்பதுபற்றி எமக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, என்ன சொல்கிறீர்கள் என்று டில்லியில் உள்ள சர்க்கார் கேட்கிறது.

மகள் ஆறு மாத கர்ப்பிணியான பிறகு, என் மருகன் குடும்பத்தை வளரச் செய்யக்கூடியவன்தானா என்பதுபற்றிய ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே என் இல்லத்துக்கே அழைத்துச் செல்ல எண்ணிவிட்டேன் என்று கூறுபவர் உண்டா! டில்லி இருக்கிறது! ஆண்டு மூன்று ஆகிறது, அஸ்திவாரம் போட்டு! பல இலட்சங்கள் செலவாயின, துவக்க வேலைகளுக்கு! தொழிற்சாலைக்கான தளம் எழும்பி விட்டது, பாதைகள் அமைந்துவிட்டன! இவ்வளவுக்கு பிறகு, இந்திய சர்க்காருக்கு, பிள்ளை பிழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாமே, கேட்டனையோ இந்த வேடிக்கையை!!

துவக்கச் சொல்லேன் புதிய தொழிற்சாலைகளை, என்று பேசும் அமைச்சர்களுக்கு, தம்பி! துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் துயரச்"சேதி' தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன செய்தார்கள்? கேட்டுப்பாரேன், காங்கிரசில் உள்ள நல்லவர்களை.

வெடி குண்டு வீசுவது போல, இந்திய சர்க்கார் வீசிய கேள்வி இருந்தது எனினும் புதிய தொழிற்சாலை அமைப்பாளர்கள், இந்திய சர்க்காரின் சந்தேகத்தைப் போக்க, புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர்.

இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை.

தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன?

தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, "கட்டை' போடுவதும் வேறு வேறா!!

எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை!

இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் "வேலை'யையும் கூறுகிறேன், கேள், தம்பி.

1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர்.

1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர்.

1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை.

1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்?

நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா?

1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது.

தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்!

எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது!

பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார்,

உங்கள் தொழிற்சாலை, "கட்டி வரக்கூடிய' முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறு வதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது.

இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்?

இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே!

1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு "ஜாலம்' செய்தார்கள்!!

உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னிதான், சாம்பார் கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!!

சிலநாள்தான் இந்தப் போலிவாதம் கூட!

இப்போது, 1955 இல் அனுமதி பெற்ற, புதிய தொழிற் சாலையினர் (Caustic Soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்!

இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி!

ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடாத்தி, வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953 இல் அனுமதி பெற்ற கம்பெனி.

இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி.

வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும் செலவான பணமும் குப்பைதானே!!

தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி.

திரு. ஜே.எல்.பி. ரோச் விக்டோரியா

1953 இல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச் விக்டோரியா!

1955 இல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி T.V. சுந்தரம் ஐயங்காருடையது!! பக்கத்திலே, யாராவது, "பாரத மாதாவின் பிள்ளை' இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக் கவனித்துப்பார், தம்பி! ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர் - காங்கிரஸ்காரர், இப்போதைய M.L.A. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்!

T.V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை!

ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன தாம்பூலம் அளிப்பானேன்?

ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது? அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக் கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி இருந்திருக்கக் கூடும்!

நாமே காங்கிரஸ்காரர், கழகம் அல்ல!

பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது!

காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம்.

வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது - எல்லாம் ஒன்றுதான்!!

டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார். எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955 இல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார்.

இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்க முடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச் விக்டோரியா, சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம் செய்தாராம்!

தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒரு கோடி: முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும் 1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்!

வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் "சேதி'யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும்.

ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது!

தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று.

துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார்.

சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர்.

எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் "சேதி'யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்!

இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை.

இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான் அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில்.

சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை.

சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை.

மத்திய சர்க்காருடைய "லகா'னில் நாம் இருக்கிறோம்.

இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது.

எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின்.

இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும்.

உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!!

இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை!

பட்டால்தான் தெரிகிறது பலருக்கும்.

உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்:

The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme.

The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras.

WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT.

It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic freedom of the State in particular and the South as a whole, is not taken away from us.

சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார்.

தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!!

ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று!

இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை.

சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம், இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப் போரிடக் கிளம்புவர்?

சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்!

தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும் தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும்.

நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும்.

ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும்.

ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!!

அன்பன்,



2-12-1956

(இது திராவிட நாடு என்னும் இதழில் பேரறிஞர் அண்ணா டிசம்பர் 2, 1956 -ல் எழுதியது)
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - என்றும் தொகுக்கப்பட்டுள்ளது.

24 September 2010

அமரர் திரு. செலஸ்டீன் மச்சாது நூற்றாண்டு விழா


தூத்துக்குடி பரதகுல பிரமுகராகிய அமரர் திரு. செலஸ்டீன் மச்சாது அவர்களின் நூற்றாண்டு விழா 23.09.2010 மாலை தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்றது. கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் நெவில் கற்றார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சமூகநலத்துறை அமைச்சர் கலந்து கொண்டு மச்சாது புகழ் குறித்து பேசினார்.

பின்னர் அமரர் திரு. செலஸ்டீன் மச்சாது அவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.

அப்போது அமைச்சர் பேசுகையில், செலஸ்டீன் மச்சாது எந்த பதவியையும் வகிக்காமல் நகரின் நலனுக்காகவும், மீனவர் சமுதாய நலனுக்காகவும் பல்வேறு சலுகைகளை பெற்றுத் தந்தவர். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் குக்கிராமமாக இருந்த தூத்துக்குடியை இன்று மாநகராக வளர்ச்சி பெற காரணமாக இருந்தவர். நகரின் முக்கிய சாலைக்கு அவருடைய பெயர் வைக்க மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத் தலைவர் அடைக்கலம், மாநில திமுக மீனவர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பெர்னார்டு ஆகியோர் பேசினர். செலஸ்டீன் மச்சாது சிறப்பு தபால் உறையை தூத்துக்குடி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் வேல்சாமி வெளியிட பொனோ வென்சர் ரோச் பெற்றுக் கொண்டார். விழாக்குழு துணைத் தலைவர் ஜோ வில்லவராயர் நன்றி கூறினார்.



ஷிப்பிங் கார்ப்ரேஷன் டைரக்டர் தஸ்நேவிஸ் பெர்னான்டோ, நாட்டுபடகு மீனவர் சங்கம் கயஸ், வில்லவராயர் சன்ஸ் இயக்குநர் ஜேசையா வில்லவராயர், வ.உ.சி கல்லூரி முதல்வர் பிரான்சிஸ், ஆல்ட்ரின் ராயன், ரினால்ட் வில்லவராயர், விழாக்குழு செயலாளர்கள் அன்ரோ மச்சாது, ஹேர்டிலி மச்சாது, விக்ராந்த் மச்சாது, சிசில்மச்சாது, ஜேசையா வில்லவராயர், இமானுவேல் மச்சாது, விழாக்குழு உறுப்பினர்கள நிக்கோலஸ் தர்மபாலன், டெரன்ஸ் வில்லவராயர், தாமஸ் பெர்னான்டோ, செயலாளர்கள் அன்டோ மச்சாது, ஹாட்லி மச்சாது, விக்ரந்த் மச்சாது, சிசில் மச்சாது, ஜேசையா வில்லவராயர், இம்மானுவேல் மச்சாது, நசீரின், போனோ ரோச், பீட்டர் பெர்னான்டஸ், குணபாலன், பிரின்ஸ்டன் பெர்னான்டோ, பெட்ஸ் பெர்னான்டஸ், நெப்போலியன், பொருளாளர் சகாயமச்சாது மற்றும் பரதகுல மக்கள் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.