Showing posts with label நெய்தல். Show all posts
Showing posts with label நெய்தல். Show all posts

24 July 2010

புங்குடு தீவு (Pungudutivu)


புங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகும். யாழ் நகரிலிருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல்
நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது. இங்கு சிறிதளவு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடியும் சிறப்பாக
நடைபெறுகின்றன.

பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது.

இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக இத்தீவின் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது. பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதி, காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றைக் கண்டு பிடித்தார்.

இத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.

இங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் தூண், லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன.

சேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர், என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.

காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.

புங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன. இம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.

தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.

தமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நூற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.

தமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.

இதன் பின்பு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.

பிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோம, அராபிய, சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம், கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.

பல்லதீவு, பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம், சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம், பாண்டியன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும், கலிங்கன்புலம், கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவு, செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம், போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம், சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.

புங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.

எனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம், அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.

1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர். இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.

சில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள், புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.

அதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று.

14 July 2010

நெய்தல் நில மன்னர்கள்


நெய்தல் நில மன்னர்கள்

- கலாநிதி ப.புஸ்பரட்ணம், இலங்கை


சங்ககாலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவற்றில் இருந்து தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிட்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. (ளுநநெஎசையவநெ 1985: 49 – 50) இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி, சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம் (ஏநடரிpடைடயi 1980: 13) பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன.


புறநானூறு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவரை பாண்டிய மன்னன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் சோழ மன்னருக்கு அவர்கள் சவாலாக விளங்கியதாகக் கூறுகிறது (புறம் 378’1) பெரிபுளஸ் என்ற நூலில் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்களை பாண்டிய மன்னன் தனது சிறையில் அடைத்ததாகவும், சிறைத்தண்டணை பெற்ற மக்களைப் பாண்டிய மன்னன் முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகிறது. (ளுஉhழகக 1912: 46) முத்துக்குளித்தலில் பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது. (முருகானந்தம் 1990, 3) முத்துக்குளித்தலைப் போல் சங்கு குளித்தலும் முக்கிய தொழிலாக விளங்கியது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13) – பாண்டி நாடு நெடுகிலும் சங்கும் முத்தும் விற்பனை செய்யப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. பாண்டிய மன்னர் வெள்வளை தரித்ததாக சின்ன மன்னூர் செப்பேடு கூறுகிறது. (ளுஐஐ.3:4)


பரதவரின் இன்னொரு தொழிலாக மீன் பிடித்தலும் வர்த்தகமும் விளங்கியது. முத்து பாண்டியரின் சொத்தாக விளங்கியது போல் மீன் பாண்டியரின் பிரதான உணவாக இருந்தது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகையில் வரும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் என்ற சொல்லாட்சி மீன்பிடித் தொழிலின் சிறப்பைக் காட்டுகிறது. (குறு 123)- பரதவர் காய விட்ட மீனை (உப்புக்கண்டம்) விற்பனைக்காக படகுகளில் கொண்டுவந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப்பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் (பட்டினப் 185 – 193) மதுரைக்காஞ்சியும் (மதுரை 321. 323) மேலை நாட்டுக் குதிரைகளும் வட இந்தியக் குதிரைகளும் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றன.


மதுரைக் காஞ்சி பாண்டி நாடு நெடுகிலும் குதிரை வர்த்தகம் நடந்ததாகக் கூறுகிறது. (மதுரை 315.24) இலங்கைப் பாளி நூல்கள் தமிழ் நாட்டு வணிகர் இலங்கையில் குதிரை வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றன. இவ் வர்த்தகத்தில் பரதவர் ஈடுபட்டதாக செனவிரட்ண கூறுகிறார். பரதவர் கடலிலிருந்து எடுத்த உப்பை உமணர் உள்நாட்டில் விற்பனை செய்தார். நற்றிணையில் உமணர் வருகையை எதிர்பார்த்து உழாத உழவர் (பரதவர்) உப்பைக் குப்பைகளாக வைத்துக் காத்திருந்தனர் என்ற குறிப்புள்ளது. (நற் 138.12) பாண்டி நாட்டிலுள்ள சில பிராமிக் கல்வெட்டுக்கள் உப்பு வணிகர் பற்றிக் கூறுகின்றன. (ஆயாயனநஎயn 1966)


இவ்வாறு பலதரப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் பரதவர் ஈடுபட்டதினால் செல்வம் இவர்களிடத்தே குவிந்தன. சங்க இலக்கியத்தில் இவர்களது இருப்பிடங்கள், மாளிகைகள், கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புக்கள் இவர்களின் செல்வ நிலையை காட்டுகின்றன. (மதுரை 315. 323 பெரும்பாண் 319, 324 அகம் 86) புற நானூறில் வரும் ‘தென் பரதவர் மிடல் சாய’ என்ற சொற்றொடர்களும், பாண்டிய நெடுஞ்செழியனை கொற்றவன் காவலன் ‘பரதவ தலைவன்’ எனவும் கூறப்படுவது சங்ககால அரசியலிலும், சமூகத்திலும் பரதவருக்கிருந்த மதிப்பைக் காட்டுகின்றது.


இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றிய தொழில்கள், பதவிகள், சமூக அந்தஸ்து என்பவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்தை அப்படியே நினைவுபடுத்துவதாக உள்ளன. சங்க இலக்கியங்களில் பரதவ சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறப்படுவது போல், இலங்கை வரலாற்று இலக்கியங்களில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இக்காலத்தில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றி ஆக்காங்கே சில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவர் பற்றிவரும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் பெருங்கற்கால கறுப்பு – சிவப்பு மண்டபங்கள் காணப்படும் இடங்களை அண்டிய பகுதியில் காணப்படுவதை சான்றாதாரம் காட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரதவர் இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். (1985 : 49) அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வில் குடியேற்றத்தின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் இலங்கையில் கிடைக்கப்பெறாத பளிங்குக் கற்கள், மணிகள், குதிரை எலும்பின் எச்சங்கள் கிடைத்துள்ளன. (ஊழniபொயஅ 1996 : 81) இவை வணிக குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.


தமிழ் நாட்டில் பரதவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் பாண்டி நாட்டிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே இடப்பெயர் வடமேற்கு இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக கி.மு.6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் முழு இலங்கைக்குரிய பெயராக மாறியதை அசோகன் காலக் கல்வெட்டிலும், கி.பி.1.2.ஆம் நூற்றாண்டுக்கு உரிய வெளிநாட்டார் குறிப்புக்களிலும் காணமுடிகிறது. இவ்விடப் பெயர் ஏற்பட பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரையிலிருந்து ஏற்பட்ட வர்த்தக குடியேற்றம் ஒரு காரணமாக இருக்கலாமென கூறுவோருமுளர். ஆனால் இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படும் இப்பெயர் தமிழ் நாட்டு வலலாற்று மூலங்களில் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னரே காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது இரு பிராந்தியத்திலும் வாழ்ந்த பரதவ சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்பால் இலங்கையிலிருந்தே அப்பெயர் தமிழ் நாட்டிற்கு சென்றதா என எண்ணத் தூண்டுகிறது.


பரத பற்றி வரும் கல்வெட்டுக்களில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாக குறிப்பிடத்தக்கது. (வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ள இககல்வெட்டில் பரதஸ ஹகிதஸ (டீயசயவயளயலய மவையளய) என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் பரத என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. (ஏறத்தாழ இதையொத்த கப்பல் உருவம் தமிழ் நாட்டில் அழகன் குளம் அகழ்வாய்வின் போது கி.மு.2.1 ஆம் நூற்றாண்டுக்குரிய ரௌலட்டட் மண்டபத்தில் பெறப்பட்டுள்ளது.) இது பரத என்பவனை கப்பல் தலைவனாக அல்லது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகனாக கருத இடமுண்டு. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்பன கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (சுப்பராயலு 1983 : 161 – 162) இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறை முகமாக வட இலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் கூறுகின்றன. (மயினைகிளார் 1953) இதனால் பொலநறுவைக் கல்வெட்டில் வரும் கப்பல் உருவத்தை பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய் அல்லது வங்கமாகக் கருதலாம்.


கல்வெட்டுக்கள் சிலவற்றை நாவிக என்ற பெயருடன் படகெ, தொட என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புரணவிதாண இவை கடற்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனக் கூறுகிறார். இதில் படகெ, தொட என்ற சொற்கள் தமிழில் வழக்கில் உள்ள படகு, தோணி போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்த இடமுண்டு. அண்மையில் பிரித்தானிய nஐர்மன் ஆய்வுக் குழுவினர் அநுராதபுர பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய சங்ககால நாணயங்களையும் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலம் ஒன்றின் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். (ஊழniபொயஅ 1996இ92) இதில் உள்ள கடற்கலத்தை கல்வெட்டுக்களில் வரும் படகெ. தோட போன்ற சொற்களுடன் தொடப்பு படுத்தலாம். இதையொத்த உருவத்தை தமிழ் நாட்டில் புதிய கற்கால ஓவியங்களிலும் சாதவானகர் கால நாணயங்களிலும் காணமுடிகிறது. இவ் ஆதாரங்களில் இருந்து சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கடல் வாணிபத் தொடர்புகள் இருந்ததென உறுதிப்படுத்தலாம். இவை பொலநறுவைக் கல்வெட்டில் வரும் பரத என்பவனை அயல் நாடுகளுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவனாகக் கருத இடமளிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழில்களில் ஒன்றாக முத்து, சங்கு குளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொழில்கள் பாண்டி நாட்டிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் நடந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் தரமான முத்து கிடைத்ததாக கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகத்தனில் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த இலங்கை மன்னர்கள் சிலர் இந்திய மன்னர்களுக்கு முத்தை பரிசாக கொடுத்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. பண்டு தொட்டு வடமேற்கு இலங்கையில் உள்ள சிலாபம் என்ற இடம் முத்துச் சிலாபம் என்ற பெயரை பெற்றிருந்ததற்கு இங்கு நடைபெற்று வரும் முத்துக் குளித்தலே முக்கிய காரணமாகும். பரத என்ற பெயருக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமானவை இப்பிராந்தியத்திலிருந்து கிடைத்திருப்பது இத்தொழில்களோடு இவர்களுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது எனலாம்.

பண்டைய இலங்கையில் மீன்பிடித் தொழிலோடு பரத என்ற பெயருக்குள்ள தொடர்பைக் காட்ட கல்வெட்டுக்களிலோ அல்லது பாளி இலக்கியங்களிலோ இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் இதற்குரிய சான்று கிடைத்துள்ளது. இங்கு இதே காலத்திற்குரிய உதிரன், தஸபிடன், மஹசாத்தன், கபதிகடலன் போன்ற தமிழ் நாணயங்களுடன் பரததிஸ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. (டீழிநசயசயஉhஉhi 1999: 53, புஷ்பரட்ணம் 1999: 55 – 70) இதில் காணக்கூடிய சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் பரததிஸ என்ற பெயரும் முன்புறத்தில் இரு மீன்கோட்டுருவமும் இடம்பெற்றிருப்பதாகும். இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம். பின்னொட்டுச் சொல்லாக வரும் திஸ என்ற பெயருக்கு பூச நட்சத்திரம் என்ற பொருள் உள்ளது (இராசகோபால்). இப்பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகிறது. இப்பெயரில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் இருந்துள்ளனர். இது பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருத்ததற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்திலுள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திஸ என்ற தமிழ் வணிகன் பற்றிக் கூறுகிறது. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று திஸ தமிழன் தமிழ் வணிகர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது. அண்மையில் தமிழ் நாட்டில் அழகன் குளம் என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்டை ஓட்டில் தீசன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (இராசகோபால்). பேராசிரியர் சிற்றம்பலம் சங்க இலக்கியத்தில் வரும் திரையர் என்ற ஒரு இனக் குழுவைக் குறித்ததெனக் கொண்டால் அச்சொல்லிற்கும் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த திஸ, திஸ்ஸ என்ற பெயர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்படக் கூடியதென்பதற்கு சில சான்றாதாரங்களைக் காட்டியுள்ளார். திரை என்ற சொல்லுக்கு கடல், கடலலை, குளம் என்ற பல கருத்துக்கள் உண்டு. இலங்கையில் கிடைத்த பரத பற்றிய 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்கள் திஸ என்பனவை பரதவ (பரத) சமூகத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகின்றன. இதில் கல்வெட்டுக்களில் வரும் வணிகன், அரச தூதுவன், கப்பல் தலைவன் போன்ற பதவிகள் அனைத்தும் பரததிஸ என்பவனோடு தொடர்புடையதாக உள்ளன. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் “திஸஹ” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. (டீழிநயசய உhiஉhi 1999: 60இ ழே- 43) இதை நாணயமாக கொள்வதைவிட திஸ என்பவனுக்குரிய முத்திரை எனக் கூறலாம். இவற்றிலிருந்து மீன் பிடித்தலோடு பரதவ சமூகத்திற்கும் திஸ என்ற பெயருக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. இச்சான்றுகள் கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளோடு பரதவ சமூகத்திற்கும் திஸ, திஸய என்ற பெயருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதால் திரையர் என்ற இனக் குழுவுடன் திஸ என்ற பெயருள்ள உறவை தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்ற கருத்திற்கு இவை மேலும் சான்றாக உள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவ சமூகத்தின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு இச்சமூகம் பற்றிய கல்வெட்டுக்கள், பண்பாட்டு மையங்களை அண்டிக் காணப்பட்டதையே சான்றாகக் காட்டுகிறார். இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பரதவ சமூகம் வாழ்ந்து வரும் இடங்களில் வட, வடமேற்கு இலங்கை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பூநகரி வட்டாரத்திலுள்ள மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய பல சான்றுகளுடன் குறிப்பாக கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள் (டீடயஉம யனெ சநன றயசந) தமிழ் பிராமி எழுத்துப் பொறிந்த மட்பாண்ட ஓடுகள், இரும்புக் கருவிகள் என்பவற்றுடன் மீன் பிடிப்பதற்கென ஊசிகளும் (குiளா ர்ழமள) கிடைத்துள்ளன. (புஷ்பரட்ணம் 1993). பரத என்ற சொல்லின் இன்னொரு வடிவமாக கல்வெட்டுக்களில் வரும் பத என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இப்பெயருக்குரியவர்கள் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்தனர் எனக் கூறலாம்.


இவர்கள் வர்த்தகத்தில் மட்டுமன்றி அரசியல், கிராம நிர்வாகம், நீதி, படைத்துறை, கலை போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிகிறது. குத்திக்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு பதகுமார என்பவன் பௌத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பதகுமர என்பதை பரதகுமார என எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் சிலப்பதிகாரம் பரதவ குமாரன் என அழைத்ததற்கு சான்றுண்டு. (சிலப் 156) அண்மையில் சேருவில் என்ற தமிழ் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் பதகம திஸ்ஸவும், தமிழ் சோழவும் (தமிட சுட) இணைந்து பௌத்த சங்கத்திற்கு தானம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ளுநநெஎசையவநெ 1985: 52). இதில் சோழர் தமிழராக குறிப்பிடப்பட்டமை சிறப்பாக நோக்கத்தக்கது. வட இலங்கையில் பதசுட என்ற சொல் சில கல்வெட்டுக்களில் வருகின்றன.


மேற் கூறப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்து சங்ககாலத்தைப் போல் சமகாலத்தில், இலங்கையிலும் பரதவ சமூகம் வாழ்ந்ததெனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் பரவர், பரதவர் என வரும் பெயர்கள் இலங்கைக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பத, பரத என மாற்றமடைந்திருக்கலாம். இதற்கு கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சம காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் தமிழில் இடம்பெற்றிருப்பதைச் சான்றாக கூறலாம். செனிவரட்னா பரத என்ற முன்னொட்டுச் சொல் திராவிட மொழிக்குரிய ஆய், மாற, மருமக என்ற பெயர்களுடனும், பிராகிருத மொழிக்குரிய சும, உதர, சுமலி போன்ற சொற்களுடனும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் இனக் குழுவைக் குறித்த பரதவ என்ற பெயர் பின்னர் சமூகப் பெயராக மாறியதாக ஒரு குருத்துண்டு. Nஐம்ஸ் ஆர்னலின் பரதவர், பரவர், பரதர் ஆகியோர் நாக இனக்குழுவை சார்ந்தவர் எனக் கூறுகிறார் (முருகானந்தம் 1990, 3) வட இலங்கை நாகதீவு எனவும், நாகர்கள் வாழ்ந்த இடம் எனவும் கூறும் வரலாற்று மரபுண்டு. இலங்கையில் பரத பற்றி வரும் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு வட இலங்கையிலும், வடமேற்கு இலங்கையிலும் காணப்படுவதுடன் சில கல்வெட்டுக்களில் பரதநாக என்ற பெயர் இணைந்து வருவதையும் காணலாம். இதனால் பரத என்ற சமூகப் பெயர் இலங்கையில் வேறுபட்ட இனக் குழுக்களிடையே சமூகப் பெயராகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் செல்வாக்கு கூடிய அளவுக்கு வட, வடமேற்கு இலங்கையில் இருந்ததெனக் கூறலாம். இன்று பரதவ சமூகம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழி பேசும் பிராந்தியங்களிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழி பேசும் வட்டார மக்களிடமும் காணப்படுகின்றன. வட, வடமேற்கு இலங்கையில் இப்பரதவ சமூகம் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதை இடைக்கால, மத்தியகால வரலாற்று ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. இதனால் இச்சமூகத்தின் தொடக்க கால ஆதாரமாக இப்பிராந்தியத்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரைக் குறிப்பிடலாம்.

தொகுப்பு:

  • நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம், சிறப்பு மலர்: புனித ஆனாள் ஆலயம் - வங்காலை
  • கலாநிதி ப.புஸ்பரட்ணம் (2003), பண்டைய இலங்கையில் பரதவர் சமூகம், சில தொல்லியல் சான்றுகள், தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, (யாழ் பல்கலைக்கழகம்).